எழுதியவர் - சம்மாந்துறை சிப்னா,
சீதனத்தை எதிர்க்கும் மகளிர் சங்கத்துக்காக
சம்மாந்துறை முழு இலங்கை முஸ்லீம் பிரதேசங்களுக்கும் ஒரு முன்மாதிரியான ஊர் என்ற பெயரைப்பெறும்போதெல்லாம் நாம் அதன் முக்கியத்துவத்தை அறிந்து பெருமையடைகின்றோம். ஆனாலும் சீதனம்/கைக்கூலி விடயத்தில் அது இன்னமும் சீர்திருத்தக் காலகட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. மட்டுமல்ல, அதனை ஒழிப்பதற்கான செயற்திட்டங்களின் வேகமும் மந்தகதியிலேயே காணப்படுகின்றன என்பதுவே கவலைக்குரியவிடயமாகும்.
எந்தவொரு சமூகத்தீங்கையும் ஒழிப்பதற்கு படிமுறையைக் கையாழவேண்டும் என்பது அல்குர்ஆன் நமக்குக் கற்பிக்கும் பாடம்.
சீதனம்/கைக்கூலியை சம்மாந்துறை உலமாக்கள் பிழையென்று கண்டறிந்ததும், பின்னர் அதற்காக தங்களது அறிவுத்தரம், சமூகத்தில் காணப்படும் அவர்களுக்கான மேலாதிக்க சக்தி என்பவற்றிற்கேற்ப அவர்கள் அவ்வப்போது முன்னெடுத்த தீர்மானங்கள், திட்டமில்கள். பிரச்சாரங்கள் என்பவற்றையும் அது கொண்டுவந்த சாதகமான விளைவுகளையும் நாம் மறந்துவிடமுடியாது. இவையெல்லாம் சம்மாந்தறைக்கு இஸ்லாமிய இயக்கங்களும், பிரசார நிறுவனங்களும் உருவாவதற்கு முன்னர் ஏற்பட்டவை.
மாப்பிள்ளையின் பின்னால் அவரது உறவினர் ஒருவர் தட்டு ஒன்றுடன் நின்றுகொண்டு மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் பணம் வைக்கப்பட்ட என்வலெப்களை வாங்கி அதனுள் இட்டு பின்னர் அவையனைத்தையும் வழங்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலுடன்; சபையில் வாசித்துக்காட்டி குறைந்த தொகை வழங்கியவர்களை கேவலப்படுத்தும் இந்த நடைமுறையிலிருந்து நமது மக்களை மீட்டு மானங்காத்தது சம்மாந்துறை (தவ்ஹீத்)உலமாக்களையே சாரும்.
ஆனால் சக்திமிக்க ஆற்றல்கொண்ட இஸ்லாமிய தஃவா ஜமாத்அமைப்புக்கள் சம்மாந்தறையில் உருவானதன்பின்னர், அவர்கள் இந்தப்பிரச்சினைக்கு எந்தப்பெறுமானம் கொடுத்தார்கள் அல்லது கொடுக்கிறார்கள் என்பது இன்னமும் அவர்களால் விரிவாகவும் தெளிவாகவும் முழு ஊருக்கும் முன்வைக்கப்படவில்லை என்பதை நான் இங்கு தீர்க்கமாகவே சுட்டிக்காட்டுவேன். சம்மாந்துறை (தவ்ஹீத்) சீதனம்/கைக்கூலிக்கெதரான பிரச்சார நடவடிக்கை திருப்திகரமானளவிற்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதும் அதனடியாக பாரிய பல மாற்றங்கள் சில தனிப்பட்ட சகோதரர்களின் தியாகங்களினால் ஏற்படுவதையும் சம்மாந்துறையில் நிறையவே காணக்கூடியதாகவிருக்கிறது. ஆனால் அவ்வமைப்புக்களின் கட்டமைப்பில் கோட்பாட்டுரீதியாகவும் குறிப்பாக அங்கத்தவர்களை உள்ளீர்க்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை இஸ்லாமிய வாழ்வுநோக்கிய பயிற்றுவித்தலில் இதற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதும் இன்னமும் தெளிவற்ற ஒன்றாகவே இருக்கிறது. விதிவிலக்காக, இதனை கோட்பாட்டு ரீதியாகவும் தமது அங்கத்தவர்களுக்கு மத்தியில் சாத்தியமானவரையில் நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் விதத்திலும் ஒரு அமைப்பு இருந்தது என்பதையும் என்னால் தெளிவாக குறிப்பிடமுடியும்.
இப்படிக்கு :-
சீதனத்தை எதிர்க்கும் மகளீா் சங்கம் (sifna)

No comments:
Post a Comment