மணமகன், மணமகளின்றி
1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலீ)
2. இருநீதமுள்ள சாட்சிகள்
3. மணமகளின் முழுமையான சம்மதம்
4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
நபி (ஸல்) கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவளுக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி
மணப்பெண்ணின் முழு சம்மதம் தேவை
ரசூல் (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்:'அயிம்மா' (விதவை, விவாக முறிவுப் பெற்ற) பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள், பாகிரா (கன்னிப்) பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என சிலர் வினவினார்கள்.
அதற்கு ரசூல் (ஸல்);: 'அவளது மௌனமே சம்மதமாகும்' என்றார்கள்.அறிவிப்பு: ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
அல்லாஹ் அறிவுறுத்துகிறான்: 'இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.' (அல்குர்ஆன் 4:19)
நபித்தோழி கன்சா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை கிதாம் (ரலி) அவர்கள் எனது (முழு சம்மதமின்றி) எனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, மபகாரி, அபூதாவூத், நஸயீ, தாரமி,
இதற்குப் பின் கன்சா (ரலி) அவர்கள் தனது முழு சம்மத்ததுடன் நபித்தோழர் அபூலுபாமா (ரலி) அவர்களை மணமுடித்ததாக அப்துல் ரஹ்மான் பின் யஜீத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹர் கொடுத்து மணம் முடியுங்கள்
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)
மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25)
மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி). ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி..
ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி
ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் (ஸல்) அவர்கள் 'உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்' என்றார்கள். அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி
போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி..
மஹர்-திருமணக்கொடை-மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை. ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20)
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! அறிவிப்பு: அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் (ரலி-அன்கும்), ஆதாரங்கள்: புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா.

No comments:
Post a Comment